பொதுவாக டிவி நிகழ்ச்சிகளும் சரி, டிவியும் சரி அதிகம் பார்த்ததில்லை, பார்ப்பதுமில்லை, பார்க்க வாய்ப்பும் கிடைப்பதில்லை. Twitter-ல் LazyGeek ஹாசினி பேசும்படத்தின் ஆயிரத்தில் ஒருவனின் விமர்சன லிங்க் கொடுத்திருந்தார். ஆயிரத்தில் ஒருவன் என்பதால் ஆவலுடன் முழுதும் பார்த்தேன்.
இல்லை, நிச்சயமாய் நான் படத்தை விமர்சனம் செய்ய போவது இல்லை.
போதும் போதும் என்று சொல்லுமளவு இணையத்தில் நம் மக்கள் இதை ஆராய்ந்து விட்டனர்.ஏன் என்று யோசித்தால் "பழுத்த மரம் தான் கல்லடி படும்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. [கொழுத்த நாயும் கல்லடி படும் என்பதும் எனக்குத் தெரியும்] ஆனால் இப்படி எல்லாம் படம் எடுக்கத் துணிந்த தயாரிப்பாளரின் தைரியத்திற்கு தலை வணங்குகிறேன்.
விகடனில் செல்வராகவன் எழுதிய "கனா காணும் காலங்கள்" படித்த காலத்திலிருந்தே அவர் மேல் ஒரு அளவு கடந்த ஆச்சரியம் உண்டு.நிகழ்ச்சியில் அவர் பேட்டியைக் கண்ட பின் சினிமாவின் மீது அவருக்கு இருக்கும் மரியாதை, கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், தன்னடக்கம், நல்ல படம் எடுக்க வேண்டும்,படம் பார்ப்பவன் தான் முக்கியம் வேறு யாரும் முக்கியமில்லை என்ற அவரின் சிந்தாந்தம் தான் அவரின் வெற்றிக்கு காரணம் என்று தோன்றியது.[யார் எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும் இவை தான் அடிப்படைக் காரணம் என்பதும் அடியேன் கருத்து]
சினிமாவின் பல்வேறு பரிமாணங்களை மிக அருகில் பல்வேறு பார்வைகளில் பார்க்கும் வாய்ப்பு இருந்தாலும் அது சுஹாசினிக்கு குறையாக இல்லாமல் நிறையாக இருப்பது நிகழ்ச்சிக்கு நல்ல விஷயம். [அதிக அறிவு ஆபத்தானது]
அட என்ன, வீட்டில் அவரும் மணியும் சினிமாவை பற்றி பேசாமலா இருப்பார்கள். இந்த படத்தில் இது சரியில்லை அது சரியில்லை அப்படி செய்து இருக்கலாம் இப்படி செய்து இருக்கலாம் என்று எல்லாம் வீட்டில் பேசி இருந்து அதன் தாக்கம் நிகழ்ச்சியில் பிரதிபலித்தால் நிகழ்ச்சி நாசமாய் போய் விடும்.அதையும் தாண்டி சுஹாசினி அவரின் தனித்துவத்தை தக்க வைத்துக் கொள்வதே ஒரு சவாலான விஷயம்.
பழகிய மனிதர்களைப் பற்றியும் நல்லதோ கேட்டதோ கருத்து சொல்வதும் கடினமான வேலை தான்.
Finely Balanced Insider view என்றால் மிகையாகாது. ஆனால் இந்த மாதிரி நிகழ்ச்சியின் நடுவே அவர் உபயோக படுத்தும் Hi -Fi ஆங்கில வார்த்தைகள் அவரை நம்மிடமிருந்து அன்னியபடுத்தி விடுகிறது!