Thursday, May 29, 2014

கவித கவித

அணைத்து விடுகிறேன்
அவளை
ஆரத்தழுவி
அள்ளி
அணைக்கும்
ஆசையை!

Thursday, May 08, 2014

விகடன் அலட்சியமா? ஆணவமா? (அறியாமையா?)

ஒரு காலத்தில் தமிழின் முண்ணனி பத்திரிக்கைகள் அனைத்தையும் என் தாத்தா வாங்கி கொண்டு இருந்தார். இப்பொழுது தாத்தா இல்லை. வாங்குவதும் நின்று விட்டது.

விடாமல் வாங்கி படித்து வருவது விகடன் மட்டும் தான். பழக்க தோசமாகி விட்டது!

முன்பு எல்லாம் படிக்க ஆவலாக இருந்தது. பிரமிப்பாகவும் இருக்கும். என் உலகம் விரிந்து விவரம் புரிய ஆரம்பித்த பின், இது தான் செய்கிறார்கள் இப்படித்தான் செய்கிறார்கள் என்று சில சூட்சமங்கள் புரிந்தாலும் மதிப்பு குறையவில்லை தான். ஆனால், இந்த வார விகடனைப் படித்த போது, கோபமும், ஏமாற்றமும் தான் மிஞ்சியது!

பிரபலங்களிடம் கேள்வி பதில் பகுதியில்
“நோக்கியா நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ- ஆக நியமிக்கப் பட்டிருக்கும் இந்தியரின் பெயர் என்ன?
பதில்: ராஜீவ் சூரி. நோக்கியா நிறுவனத்தை வாங்கியிருக்கும் மைக்ரோசாப்ட் நிர்வாகம், நிறுவனத்தின் நல்லெண்ணத்தைத் தக்கவைக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது!

1. நோக்கியாவின் மொபைல் டிவிஷனை மட்டும் தான் மைக்ரோசாப்ட் வாங்கி இருக்கிறது.
2. நோக்கியா என்னும் நிறுவனம் இன்னும் தனியாகத்தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது. தொலைத் தொடர்பு சாதனங்களை விற்றுக் கொண்டு தான் இருக்கிறது.
3. ராஜீவ் சூரி, நோக்கியா என்னும் நிறுவனத்திற்குத் தான் சி.இ.ஓ வாக நியமிக்கப் பட்டிருக்கிறார். இந்த நியமனத்திற்கும் மைக்ரோசாப்ட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை! இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நோக்கியா தற்போது விற்றுக் கொண்டிருக்கும் பொருட்களுக்கும் செய்யும் வியாபாரங்களையும் நிர்வகிக்க இவரை விட்டால் யாரும் இல்லை என்று இந்த துறையில் இருப்பவர்கள் புகழ் பாடுகிறார்கள்.
4. பெரிய பெரிய நிறுவனங்களில் எல்லாம் நல்லெண்ணத்தை தக்க வைக்க நியமனங்கள் நடைபெறுவது இல்லை. அது என்ன கூட்டணி அரசியலில் அமைக்கப்படும் இந்திய அமைச்சரவையா?

நோக்கியா என்ற கம்பெனி என்ன செய்கிறது என்ற புரிதல் இல்லை, நோக்கியா மைக்ரோசாப்ட் பரிவர்த்தனையப் பற்றி புரிதலும் இல்லை. ராஜீவ் சூரி என்ற மனிதர் யார், இப்படி ஒரு நிலைமைக்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்ற யோசனை எதுவும் இல்லை. மேலாண்மை படிப்பு படிக்காமல் இப்படி சி.இ.ஒ வாக சக்கைப் போடு போடுபவர்களில் ஒருவர் ராஜீவ் சூரி.

நோக்கியா படிக்கப் போகிறதா?, இல்லை, மைக்ரோசாப்ட் படிக்கப் போகிறதா? இல்லை, ராஜீவ் சூரி தான் படிக்கப் போகிறாரா? மான நஷ்ட வழக்கு போடப் போகிறார்களா என்ற அலட்சியமா? இல்லை வாசகர்கள் யாருக்கும் எதுவும் தெரியாது என்கிற மனப்பான்மையா?

இதை நிச்சயம் சிறு தவறு என்று சொல்ல முடியாது. எத்தனை லட்ச வாசகர்கள்? எத்தனை பேர் இதைப் படிப்பார்கள். அப்படியே நம்புவார்கள். ஒரு தவறான தகவலைத் தருகிறோம் என்ற சமூக பிரக்ஞை, பொறுப்பு எதுவும் வேண்டாமா?

பிரபலங்களுக்கு உலக நிலவரம் தெரிகிறதா என்று கேட்கும் முன், கேட்கும் நமக்கு அதைப் பற்றி தெரிகிறதா என்று யோசிக்க வேண்டும். தெரிந்த கேள்விகளை மட்டும் கேட்டால் நன்றாக இருக்கும்.!

பி.கு
இந்தியரை நியமித்தால் இந்தியாவில் அதிக அளவில் நோக்கியா போன்கள் விற்கும் என்ற நம்பிக்கையில் தான் அவரை நியமித்தார்கள் எனவும்.
மைக்ரோசாப்ட்டில் அதிகமாக இந்தியர்கள் வேலை செய்வதால் தான் இந்தியரான சத்யா நாடெல்லாவை சி.இ.ஒ வாக நியமித்தார்கள் எனவும் எழுதாத வரை தமிழ் வாசகர்கள் சந்தோசப் பட்டுக் கொள்ள வேண்டியது தான்!

பி.பி.கு
ராஜீவ் சூரியும் மைக்ரோசாப்ட்டின் சி.இ.ஓ வான சத்யா நாடெல்லாவும் மணிப்பால் பல்கலைகழகத்தில் படித்தவர்கள்.